Press "Enter" to skip to content

மத்திய பாஜக அரசு அநியாயமான தாக்குதலை நடத்துகிறது- மு.க.ஸ்டாலின்

சட்டப்பூர்வமான இடஒதுக்கீட்டின் மீது மத்திய பா.ஜ.க. அரசு அநியாயமான தாக்குதலை நடத்துகிறது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பிரதமராக வி.பி.சிங் பொறுப்பேற்றதற்குப் பிறகு பெறப்பட்ட, மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை எப்படியும் ஒழித்தே தீருவது என்று மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

ஏற்கனவே 27 சதவீத இடஒதுக்கீட்டில் 50 சதவீதத்தைக் கூட நிரப்பாமல் வஞ்சித்து, மருத்துவக் கல்வியில் அறவே நிராகரித்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை பாழ்படுத்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது கிரீமிலேயர் வருமான வரம்பிற்கு நிகர சம்பளத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக வெளிவரும் செய்திகள், இடஒதுக்கீட்டின் இதயத்தில் ஈட்டிக்கொண்டு பாய்ச்சுவதுபோல் இருக்கிறது.

1993-ல் ஒரு லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட கிரீமிலேயருக்கு கணக்கிடப்படும் வருமான வரம்பு, கடந்த 27 ஆண்டுகளில் 9 முறை உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.இதுவரை 4 முறை மட்டுமே கிரீமிலேயருக்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 2015-ம் ஆண்டிலேயே கிரீமிலேயர் வருமான வரம்பு 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும், என்று தெளிவான பரிந்துரையை வழங்கியிருக்கிறது. அப்போதே பிற்படுத்தப்பட்டோர் சமுதாய நலனுக்கான நாடாளுமன்றக் குழு கிரீமிலேயர் வருமான வரம்பு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்று ஒருமனதாகப் பரிந்துரை அளித்துள்ளது.

ஆனால் இவை எதையும் கண்டு கொள்ளாமல் பெயரளவுக்கு ரூ.6 லட்சமாக இருந்த கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.8 லட்சமாக மட்டுமே உயர்த்தி, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை, 27 சதவீத இடஒதுக்கீடு பயனை முழுவதும் அனுபவிக்க விடாமல் மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுத் தடுத்தது.

இந்தத் துரோகம் போதாது என்று, முதலில் சம்பளத்தை கிரீமிலேயர் வருமானமாக எடுத்துக் கொள்வோம் என்று, ஆணையத்தில் பா.ஜ.க. வினரை தலைவராகவும், உறுப்பினர்களாகவும் நிரப்பி ஒப்புதலைப் பெற்று, இப்போது நிகர சம்பளத்தை எடுத்துக் கொண்டு கிரீமிலேயர் வருமானத்தைக் கணக்கிடுவோம், என்று துடிப்பது, சமூக நீதிக்கு எதிரானது.

கிரீமிலேயர், 27 சதவீத இடஒதுக்கீட்டின் பயனை அடைவதற்குத் தடையாக இருக்கிறது என்று மத்திய அரசுக்கு 2015-ல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெளிவாகப் பரிந்துரை வழங்கிய போதிலும், சட்டப்பூர்வமான இடஒதுக்கீட்டின் மீது மத்திய பா.ஜ.க. அரசு அநியாயமான தாக்குதலை நடத்துகிறது.

ஆகவே, மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்திடவும், கிரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்திடவும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »