Press "Enter" to skip to content

சென்னை பூக்கடை பஜாரில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க நூதன முறை

சென்னை பூக்கடை பஜாரில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க நூதன முறையாக குடைகளை வழங்கி வியாபாரிகள் அசத்தினர்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பல்வேறு கட்ட தளர்வுகளுடன் 6-வது ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை அமலில் இருந்து வருகிறது. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்ட போதிலும், சென்னை பூக்கடை பஜாரில் உள்ள பத்திரியன் தெருவில் இயங்கி வரும் சில்லரை வியாபாரிகள் கடந்த 4 மாதத்துக்கும் மேலாக கடைகள் திறக்காமல் இருந்து வந்தனர். இதற்கு முக்கிய காரணமாக சமூக இடைவெளி பின்பற்றுவது சிரமமாக இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

இதனால், இங்கு பூக்கடை வைத்து வந்த சுமார் 120 வியாபாரிகளின் குடும்பம் மற்றும் இந்த பூக்கடைகளில் இருந்து பூக்களை வாங்கி வியாபாரம் செய்யும் பெண்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சில்லரை பூக்கடை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், இந்த பூக்கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தாங்கள் என்ன கூறுகிறீர்களோ அதனை செய்ய தயாராக இருக்கிறோம் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பூக்கடைகளை திறக்க நேற்று அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக பூக்கடை பஜார் சில்லரை வியாபாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தங்கள் கடைகளுக்கு முன்பு கம்புகளால் தடுப்பு வேலிகள் அமைத்தனர். மேலும், கடைகளுக்கு வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டும், கிருமி நாசினிகளை கையில் தெளித்தும், முகக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு இலவசமாக முகக்கவசமும் வழங்கினர்.

எல்லாவற்றிற்கும் மேலாக சிகரம் வைத்தார் போன்று கடைகளுக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக குடைகளை வழங்கி சில்லரை வியாபாரிகள் அசத்தினர். இதற்காக ஆயிரம் குடைகளை வாங்கியதுடன், 10 காவலாளிகளை பணிக்கு அமர்த்தி, தெருவின் இருபுறமும் நின்று குடைகளை வழங்கி தெருவுக்குள் அனுமதித்துவிட்டு, பூக்களை வாங்கிய பின் வெளியே வரும்போது, குடைகளை வாங்கிக் கொண்டு அனுப்பினர். இதனை அங்கு பூக்கள் வாங்க வந்தவர்கள் பெரிதும் பாராட்டிச் சென்றனர். 

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »