Press "Enter" to skip to content

தங்கம் கடத்தல் வழக்கு – 2வது நாளாக சிவசங்கரனிடம் 10 மணி நேரம் என்.ஐ.ஏ விசாரணை

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் இரண்டாவது நாளாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் 10 மணி நேரம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருவனந்தபுரம்:

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளராக இருந்த அவர், தங்க கடத்தல் கும்பலுக்கு தலைமைச் செயலகம் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. போலி சான்றிதழ் மூலம் கேரள அரசின் ஐ.டி துறையில் சுவப்னா சுரேஷுக்கு உயர் பதவி கிடைக்க உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் சிவசங்கரனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கொச்சி என்.ஐ.ஏ அலுவலகத்தில் சிவசங்கரனிடம் நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றது. அவரிடம் 9 மணி நேரம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கொச்சி என்.ஐ.ஏ அலுவலகத்தில் சிவசங்கரனிடம் இரண்டாவது நாளாக நேற்று காலை 10 மணிக்கு  விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து 10 மணி நேரத்துக்கும் மேலாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்தனர். இரவு 8.30 மணியளவில் விசாரணை முடிந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »