Press "Enter" to skip to content

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம் – அறக்கட்டளை வேண்டுகோள்

ராமர் கோவில் பூமி பூஜையை நேரில் காண அயோத்திக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

லக்னோ:

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததையடுத்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவில் கட்டும் பணிகளை நிர்வகிக்க 15 உறுப்பினர்களைக் கொண்ட, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. 

கோவில் கட்டுவதற்கான நன்கொடை மற்றும் கட்டுமானப் பொருட்களை பல்வேறு தரப்பினரும் இந்த அறக்கட்டளைக்கு வழங்கி வருகின்றனர்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், ராமர் கோவில்  பூமி பூஜை நடைபெறும் நிகழ்ச்சியை நேரில் காண பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அறக்கட்டளை சார்பில் வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது:

1984-ம் ஆண்டு முறைப்படி தொடங்கப்பட்ட ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான இயக்கத்திற்கு கோடிக்கணக்கான ராமர் பக்தர்களிடம் இருந்து பேராதரவு கிடைத்தது.

தற்போது பூமி பூஜை நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்பது அனைவருக்கும் ஏற்படும் இயற்கையான விருப்பமாகும்.

கொரோனா தொற்று பரவலால் தற்போது பக்தர்கள் கலந்து கொள்ள முடியாத சூழல் உள்ளது. அடிக்கல் நாட்டு விழா தொலைக்காட்சி மற்றும் இணைய தளத்தில் நேரலை செய்யப்படும். எனவே மக்கள் வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »