உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேஷ் குல்லர் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
உலக நாடுகளின் வளர்ச்சிக்கு, கடன் உதவி அளிக்கும் முக்கிய வங்கிகளில் ஒன்றாக, உலக வங்கி உள்ளது. இந்த வங்கி, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
இந்தநிலையில் உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேஷ் குல்லர் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது அரியானா மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டரின் முதன்மை செயலாளராக பணியாற்றி வரும் ராஜேஷ் குல்லர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிர்வாக இயக்குனராக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சமீர் குமார் காரே நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது மத்திய பொருளாதார நலத்துறையின் செயலாளராக பணியாற்றி வரும் சமீர் குமார் காரே அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் நிர்வாக இயக்குனராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Source: Maalaimalar