Press "Enter" to skip to content

நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு – மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் 31-க்குள் முடிக்க மத்திய அரசு உத்தரவு

வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும்நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் 31-க்குள் முடிக்கவும் உத்தரவிட்டு இருக்கிறது.

சென்னை:

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.

நோய்த்தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் அடுத்த அறிவிப்பு வரும் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி கிடையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது.

அட்டவணை

இதனால் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாமலும் போனது. இதையடுத்து அதுதொடர்பாக ஆராய குழு அமைக்கப்பட்டு, அதன்படி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று கூறியது. அதன்படி, ஒவ்வொரு மாநிலங்களிலும் இணையத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், இறுதி செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்துசெய்யப்படுவதாக உயர்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது. ரத்துசெய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுக்கான மதிப்பெண் எப்படி வழங்க வேண்டும்? என்பது குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வு முடிவும் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 15-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதிக்குள் இணையத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்த உயர்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் இறுதி செமஸ்டர் தேர்வை அறிவித்து நடத்தி வருகின்றன.

அந்தவகையில் சென்னை பல்கலைக்கழகம் கடந்த 21-ந்தேதி முதல் இணையத்தில் தேர்வை நடத்தி வருகிறது. அண்ணா பல்கலைக்கழகம் நேற்று முதல் இணையத்தில் தேர்வை தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் முதல் ஆண்டு மாணவர்களை தவிர, இதர மாணவர்களுக்கான வகுப்புகள் இணையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பது கேள்விக்குறியாகவே நீடித்து வந்தது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங் தன்னுடைய ‘டுவிட்டர்’ பதிவில் பதிலை தெரிவித்து இருக்கிறார். அதில், ‘கொரோனா நோய்த்தொற்றையொட்டி 2020-21-ம் கல்வியாண்டில் முதல் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான கால அட்டவணையை நிபுணர் குழு தயாரித்தது. அந்த நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக்குழு ஏற்றுக்கொண்டு இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

அதன்படி, முதல் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1-ந் தேதிக்கு பிறகு கல்லூரி திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வகுப்புகள் 2-ந்தேதி அல்லது முதல் வாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது. இதற்கான மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, 2020-21-ம் கல்வியாண்டுக்கான கல்வி நேர இழப்பை ஈடுசெய்ய கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்கள் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வியாண்டு தொடங்குவதற்கான தாமதத்தை ஈடுசெய்யும் வகையில் விடுமுறைகளை குறைக்க வேண்டும் என்றும், அப்படி செய்யும்போது இந்த ‘பேட்ச்’ மாணவர்கள் சரியான நேரத்தில் பட்டத்தை பெறுவார்கள் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்து இருக்கிறது.

அந்தவகையில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கடந்த மாதத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு பணிகளும் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகிற 25-ந்தேதி (நாளை மறுதினம்) தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதேபோல், மருத்துவப்படிப்புக்கு ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ‘நீட்’ தேர்வும் நடைபெற்று முடிந்து இருக்கிறது. விரைவில் அதற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »