அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பெரும் அடைமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய அடைமழை (கனமழை) முதல் பெரும் அடைமழையும் ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்), பெருங்களூர் (புதுக்கோட்டை), வல்லம் (தஞ்சாவூர்) தலா 13, கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை) 11, தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 9, காரியாபட்டி (விருதுநகர்), சமயபுரம் (திருச்சி), அரிமளம் (புதுக்கோட்டை), லால்குடி (திருச்சி) தலா 8, வானுர் (விழுப்புரம்), இலுப்பூர் (புதுக்கோட்டை), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), குடவாசல் (திருவாரூர்), திருமனுர் (அரியலூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்) தலா 7, பெருந்துறை (ஈரோடு), அறந்தாங்கி (புதுக்கோட்டை), பவானி (ஈரோடு), கிராண்ட் அணைகட்டு (தஞ்சாவூர்), விராலிமலை (புதுக்கோட்டை), தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) தலா 6, மஞ்சளாறு (தஞ்சாவூர்), ஜெயன்கொண்டம் (அரியலூர்), பூதலூர் (தஞ்சாவூர்), செங்கம் (திருவண்ணாமலை), கீரனுர் (புதுக்கோட்டை), மிளம் (விழுப்புரம்), தொழுதூர் (கூடலூர்), திருவண்ணாமலை, ஈரோடு, பரமக்குடி (ராமநாதபுரம்), மானாமதுரை (சிவகங்கை), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) தலா 5.
நாளை மத்திய வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெறக்கூடும். இதன் காரணமாக அக்டோபர் 19 தேதி மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அக்டோபர் 20ம் தேதி மத்திய மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அக்டோபர் 21ம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar