Press "Enter" to skip to content

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று அடைமழை (கனமழை) பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) அடைமழை (கனமழை) பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது,

சென்னை:

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மிக தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி வங்க கடலில் உருவான நிவர் புயல் காரணமாக வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் ‘புரெவி’ என்ற புயல் உருவாகி தமிழக கடலோர பகுதிகள் மற்றும் வட மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.

வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயல் வலுவிழந்து, தற்போது தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டு இருந்தாலும் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மன்னார் வளைகுடா பகுதியில் நிலைக்கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இருக்கிறது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 5-ந்தேதி (இன்று) காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலு இழக்கிறது. அதன்பின்னர், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர தொடங்கி, தெற்கு கேரள பகுதியை நோக்கி செல்லக்கூடும் என்று தற்போது கணிக்கப்பட்டு இருக்கிறது.இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவள்ளூர், காஞ்சீபுரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »