சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 8 புதிய தொடர் வண்டிகள் இயக்கப்படுகின்றன.
புதுடெல்லி:
குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டம், கேவடியா பகுதியில் நர்மதை ஆற்றங்கரையில் மறைந்த முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. ‘ஒற்றுமை சிலை’ என்று அழைக்கப்படும் இச்சிலை, மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது. இதை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்ற, பிரதமர் மோடி பல்வேறு வசதிகளை செய்து வருகிறார்.
படகு போக்குவரத்து, தொடர் வண்டி போக்குவரத்து, நீர்வழி விமான சேவை என படிப்படியாக இதற்கான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கேவடியாவுக்கு என்றே, இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் பசுமை தொடர் வண்டி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேவடியா பகுதியுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில், 8 புதிய தொடர் வண்டிகள் இயக்கப்பட உள்ளன. காணொளி மூலமாக இன்று இந்த தொடர் வண்டிகளின் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
குஜராத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநில முதல்வர் விஜய் ரூபானி, மத்தியதொடர்வண்டித் துறை மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்கு இந்த தொடர் வண்டிகள் இயக்கப்படுவதால், வெளியே இருப்பதை பார்க்கும் வகையில் தொடர் வண்டி பெட்டிகளின் பக்கவாட்டு பகுதிகளும், மேற்கூரைகளிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. பயணத்தின் போதே, இதன் மூலமாக ஒற்றுமை சிலையையும், அதை சுற்றியுள்ள இயற்கை அழகையும் கண்டு ரசிக்கலாம்.
இந்த தொடர் வண்டிகளில் ஒன்று அகமதாபாத்தில் இருந்து கேவடியா வரை இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி ஆகும். இந்த தொடர் வண்டி மற்றும் தொடர் வண்டி பெட்டிகளின் புகைப்படங்களை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar