இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.20 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.
புதுடெல்லி:
கொரோனா ஊரடங்கால் முடங்கிப்போன இந்திய பொருளாதாரம், தற்போது படிப்படியாக கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. இது ஜி.எஸ்.டி. வசூலில் எதிரொலித்து வருகிறது.
அந்தவகையில் கடந்த மாத (ஜனவரி) ஜி.எஸ்.டி. வசூல் சுமார் ரூ.1.20 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. அதாவது நேற்று மாலை 6 மணி வரை ரூ.1,19,847 கோடி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் அதிகம் பேர் வரி தாக்கல் செய்வார்கள் என்பதால், இது இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும். கடந்த 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது முதல் கடந்த மாதம்தான் இவ்வளவு அதிக தொகை வந்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதற்கு முன் கடந்த டிசம்பர் மாதம் கிடைத்த ரூ.1,15,174 கோடிதான் அதிகபட்சமாக இருந்தது.
தற்போது அதைவிட அதிக அளவு வசூலிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூல் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த தகவல்களை மத்திய நிதியமைச்சகம் அறிக்கை மூலம் வெளியிட்டு உள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar