வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்பது குறித்து இப்போது பதில் சொல்ல முடியாது என்று விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கட்சி தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் நேரில் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து விஜய பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி தொடருமா? தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்குமா? என்ற யூகங்களுக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டி தொண்டர்களின் ஒருமித்த கருத்தை அறிந்த பின்னர் பதில் அளிக்கிறேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். கண்டிப்பாக சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடுவார். இதுகுறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் வெளியிடுவோம். விஜயகாந்த் உடனே வெளியே வந்து இதுகுறித்து அறிவிப்பது என்பது சற்று தாமதம் ஆகலாம்.
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சமாதியை காண சசிகலா வருவதை தடுக்க முயற்சிப்பதாக கூறப்படுவது அ.தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் நடைபெறும் பிரச்சினை. இதுகுறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar