சட்டசபைக்குள் குட்கா எடுத்துச்சென்ற திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை குழுவின் 2-வது நோட்டீசையும் ரத்து செய்தது சென்னை உயர்நீதிநீதி மன்றம்.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக குற்றம் சாட்டி, அவற்றை தி.மு.க., உறுப்பினர்கள் அவைக்குள் கொண்டு சென்றனர். இவர்களது செயல் உரிமை மீறல் என்று கூறி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., உறுப்பினர்களுக்கு உரிமை குழு அறிவிப்பு அனுப்பியது. இதை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிநீதி மன்றம், அந்த நோட்டீசை ரத்து செய்தது. விதிமுறைகளை பின்பற்றி புதிய நோட்டீசை அனுப்ப விரும்பினால், அனுப்பலாம் என்றும் உத்தரவிட்டது.
இதன்படி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு புதிய நோட்டீசை உரிமை குழு மீண்டும் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி பிறப்பிப்பார் என்ற தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இவ்வழக்கின் தீர்ப்பை வாசித்தார். அதில் உரிமை குழுவின் நோட்டீசை ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், உரிய காரணங்களின்றி சபாநாயகர் பரிந்துரைத்தார் என்ற காரணத்திற்காக மட்டுமே அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar