தமிழக தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு பொதுத்தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலை எந்த தேதியில் நடத்தலாம் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்திய தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
அதில் ஏப்ரல் மாதம் கடைசி வாரம் அல்லது மே 2-வது வாரத்துக்குள் தேர்தலை நடத்துவதற்கு 4 தேதிகளை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில் எந்த தேதியில் தேர்தலை நடத்தலாம் என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்க உள்ளது. அநேகமாக மார்ச் முதல் வாரம் தேர்தல் தேதிக்கான அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று சென்னை வந்தார். அவருடன் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார், கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஷேபாலி, பி.சரண், பொதுச்செயலாளர் உமேஷ்சின்ஹா, துணை தேர்தல் ஆணையர் சந்திரபூஷண்குமார், இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, செயலர் மலேய்மாலிக் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ள இவர்கள் நேற்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட 10 கட்சி பிரதிநிதிகளை அழைத்து கருத்துகளை கேட்டு அறிந்தனர்.
அப்போது 10 கட்சி பிரதிநிதிகளும் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.
ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் தேர்தல் கமிஷனரிடம் கொடுத்தனர். அதன் மீது நடவடிக்கை மேற்கொள்வதாக தலைமை தேர்தல் கமிஷனர் உறுதி அளித்தார்.
இந்த கூட்டத்துக்கு பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை சூப்பிரண்டுகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டம் இரவு 9 மணி வரை நீடித்தது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை வாக்குச்சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை-எவை? அங்கு கூடுதலாக என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் துணை ராணுவ படையினர் எவ்வளவு பேர் தேவைப்படும் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு விட்டதா? என்பது குறித்தும் தலைமை தேர்தல் ஆணையர் கேட்டறிந்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் போதுமான அளவில் உள்ளதா? என்பதையும் கேட்டறிந்தார்.
அப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு விட்டன. பதட்டம் நிறைந்த வாகுச்சாவடிகள் எவை- எவை என்பது குறித்து பட்டியல் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று 2-வது நாளாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், மைய கட்டுப்பாட்டு வங்கி உயர் அதிகாரிகளை அழைத்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நடைபெறும் பணபரிவர்த்தனை குறித்து பட்டியல் எடுத்து அதை வருமான வரித்துறையினருக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஒரே நாளில் அதிகமாக பணம் எடுக்கும் நபர்கள் பற்றிய விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டம் முடிந்ததும் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காவல் துறை டி.ஜி.பி. திரிபாதி மற்றும் உள்துறை செயலாளர், உளவு பிரிவு ஐ.ஜி., கடலோர காவல் படை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டம் முடிந்ததும் இந்திய தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பத்திரிகையாளர்களை சந்தித்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரிவாக பேட்டியளிக்கிறார். அதன் பிறகு அவர் புதுச்சேரி மாநிலத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar