பிரதமர் மோடி வரும் 25-ம் தேதியும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 19-ம் தேதியும் தமிழகம் வருகின்றனர்.
சென்னை :
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்க நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார்.
நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அவர் கேரளா கிளம்பி சென்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இந்த மாதம் மீண்டும் தமிழகம் வருவார் என தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.
இதுகுறித்து, சென்னையில் தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரும் 25-ம் தேதி மீண்டும் வருகிறார். கோவை வரும் அவர் அரசு மற்றும் பா.ஜ.க நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதேபோல், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 19-ம் தேதி தமிழகம் வருகிறார். ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 21-ம் தேதி சேலம் வருகிறார் என தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும். இரட்டை இலக்கத்தில் எங்கள் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருப்பார்கள்.
கோவையில் வரும் 25-ம் தேதி நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வரும் 21-ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார் என தெரிவித்தார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar