Press "Enter" to skip to content

ரிஷிகங்கா நதியில் புதிய பாலம் அமைப்பு – நாளை திறக்கப்படுகிறது

பனிப்பாறை உடைந்ததால் ரிஷிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் மேலே கட்டப்பட்டிருந்த பல பாலங்கள் அடித்துச்செல்லப்பட்டன.

ரிஷிகேஷ்:

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ந்தேதி திடீரென உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பெருத்த சேதம் விளைந்தது. ஏராளமான உயிர்களை பறித்த இந்த பேரிடர் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பனிப்பாறை உடைந்ததால் ரிஷிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் மேலே கட்டப்பட்டிருந்த பல பாலங்கள் அடித்துச்செல்லப்பட்டு 13 கிராமங்களுக்கான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த கிராமங்களை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் நோக்கில் மாற்று பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. கடந்த 25-ந்தேதி தொடங்கப்பட்ட இந்த பணிகளை வருகிற 20-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் எல்லை சாலை அமைப்பு நிறுவனத்தார் இரவு-பகலாக அயராது பணி செய்து இந்த பாலப்பணிகளை முடித்து விட்டனர். எனவே சோதனை அனைத்தையும் முடித்து நாளை (வெள்ளிக்கிழமை) இந்த பாலம் பொதுமக்களுக்காக திறக்கப்படுகிறது. அடித்துச்செல்லப்பட்ட பாலத்துக்கு பதிலாக புதிய பாலத்தை வெகுவிரைவில் கட்டி திறக்கப்படுவது சமோலி மாவட்டத்தினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »