Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடி நாளை ஆலோசனை

குவாட் கூட்டணி உச்சி மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காணொலி காட்சி மூலம் இம்மாநாடு நடக்கிறது.

வாஷிங்டன்:

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2004-ம் ஆண்டு ‘குவாட்’ கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. 2007-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியது. வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலேயே இதுவரை பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்தநிலையில், முதல்முறையாக தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ‘குவாட்’ கூட்டணி உச்சி மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காணொலி காட்சி மூலம் இம்மாநாடு நடக்கிறது.
                                                        
இதில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா ஆகியோர் காணொலி மூலம் கலந்து கொள்கிறார்கள்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்பு செயலாளர் ஜென் பிசாகி கூறியதாவது:-

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை அமெரிக்காவின் முக்கியமான கூட்டாளிகள் ஆகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் கூட்டாளிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புக்கு ஜோ பைடன் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை இது காட்டுகிறது.

இந்த கூட்டத்தில், பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. உலக சமுதாயம் சந்திக்கும் கொரோனா அச்சுறுத்தல், பொருளாதார பிரச்சினை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதுபோல், டெல்லியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனியாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘4 தலைவர்களும் பரஸ்பர நலன்சார்ந்த பிராந்திய, உலக பிரச்சினைகள் குறித்து விவாதித்து கருத்து பரிமாற்றத்தில் ஈடுபடுவார்கள்.

கொரோனாவை ஒடுக்குவதற்கான முயற்சிகள், பாதுகாப்பான, மலிவான கொரோனா தடுப்பூசிகளை கிடைக்கச் செய்வது, பருவநிலை மாற்றம், கடல்சார் பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ராணுவ வலிமையை அதிகரித்து வருகிறது. தெற்கு சீன கடல் முழுவதையும் சொந்தம் கொண்டாடுகிறது. இந்த பின்னணியில், இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளும் நாளை ஆலோசனை நடத்துகின்றன.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »