Press "Enter" to skip to content

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு: குஷ்பு அதிர்ச்சி

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை பா.ம.க.வுக்கு, அ.தி.மு.க. அறிவித்திருக்கிறது. இது அத்தொகுதியை பெரிதும் எதிர்பார்த்திருந்த பா.ஜ.க.வுக்கும், குஷ்புவுக்கும் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை :

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சென்னையில் உள்ளடங்கிய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி நிச்சயம் பா.ஜ.க.வுக்கே ஒதுக்கப்படும் என்று அனைவராலும் எதிர்நோக்கப்பட்டது. காரணம், அத்தொகுதியில் பா.ஜ.க. பொறுப்பாளராக நடிகை குஷ்பு களமிறக்கப்பட்டது தான். இன்னும் சொல்லப்போனால் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு தான் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இதனாலேயே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு மிகவும் கவனம் செலுத்தினார். தொகுதியில் தினந்தோறும் வீடு வீடாக சென்று பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். மேளதாளம் வாசித்தும், பெண்களுடன் சகஜமாக நடனமாடியும் தினந்தோறும் அப்பகுதிவாசிகளின் கவனத்தை ஈர்த்து வந்தார். தொகுதிக்குட்பட்ட அண்ணாசாலையில் ஹை-டெக் பாணியில் கண்டெய்னரில் தேர்தல் பணிமனை அமைத்தார். ‘நீங்கள் தான் வேட்பாளர்’ என்று அறுதியிட்டு கூறும் அளவுக்கு குஷ்புவின் செயல்பாடுகள் அமைந்தது. மேலும் தனக்கு ‘சீட்’ கொடுத்துவிட்டதாகவே நினைத்து நடிகை குஷ்பு ஓடி ஓடி உழைத்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் சவாலான வேட்பாளராக குஷ்பு நிச்சயம் இருப்பார் என்று ஆரூடமும் கூறப்பட்டது.

இந்தநிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை பா.ம.க.வுக்கு, அ.தி.மு.க. அறிவித்திருக்கிறது. இது அத்தொகுதியை பெரிதும் எதிர்பார்த்திருந்த பா.ஜ.க.வுக்கும், பம்பரம் போல சுழன்றி தேர்தல் பணியாற்றிய குஷ்புவுக்கும் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »