திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி வருகிற 30-ந்தேதி தாராபுரத்தில் பிரசாரம் செய்கிறார்.
இதற்காக தாராபுரம் உடுமலை செல்லும் சாலையில் மாருதிநகர் அருகே 85 ஏக்கர் நிலப்பரப்பில் பந்தல் மற்றும் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி, உலங்கூர்தி வந்து செல்வதற்கான இறங்குதளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரசாரத்தில் பங்கேற்பதற்காக 30-ந்தேதி காலை டெல்லியில் இருந்து புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, கேரள மாநிலம் பாலக்காடு சென்று, அம்மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
பின்னர் அங்கிருந்து உலங்கூர்தி மூலம் தாராபுரம் வருகிறார். தாராபுரத்தில் மதியம் 12-50 மணியளவில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மோடி அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். மோடி வந்து இறங்குவதற்காக மேடையின் அருகேயே உலங்கூர்தி இறங்கு தளம் அமைக்கப்படுகிறது.
பிரசார கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பிரதமர் நரேந்திரமோடி வருகையையொட்டி தாராபுரம் நகர் முழுவதும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகிறது.
பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை அமைக்கப்படும் பகுதிக்குள் செல்ல தகுந்த அடையாள அட்டைகளை காட்டிய பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே நேற்று மேடை மற்றும் உலங்கூர்தி தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar