Press "Enter" to skip to content

அசாம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல்- முதற்கட்ட வாக்கு பதிவு நிறைவு

அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபை முதற்கட்ட தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி முறையே 72.14% மற்றும் 79.79% வாக்குகள் பதிவாகி உள்ளன.

புதுடெல்லி:

அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.  மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. இதைப்போல அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது..

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியதில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கொரோனா காலம் என்பதால் 1 மணி நேரம் வாக்குப்பதிவு செய்யும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் முதல் 3 மணிநேரத்தில் 15 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இன்று காலை 11 மணி நிலவரப்படி, மேற்கு வங்கத்தில் 24.61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், அசாமில் 24.48 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தகவல் வெளியானது.

அதனை தொடர்ந்து மதியம் 1 மணி நிலவரப்படி, அசாமில் 37.47 சதவீத வாக்குகளும் மற்றும் மேற்கு வங்கத்தில் 40.73 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் மாலை 3 மணி நிலவரப்படி முறையே 47.10% மற்றும் 55.27% வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி முறையே 71.62% மற்றும் 77.99% வாக்குகளும், மாலை 5:30 மணி வரை, 72.16% மற்றும் 79.79% வாக்குகளும் பதிவாகி உள்ளன.

பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தினர். அனைத்து வாக்கு சாவடிகளிலும் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டன.

இந்த நிலையில், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்கு பதிவு நிறைவடைந்து உள்ளது. இதில், மாலை 6 மணி நிலவரப்படி முறையே 72.14% மற்றும் 79.79% வாக்குகள் பதிவாகி உள்ளன என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »