மத்தியபிரதேசத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். தம்பதிகள் மீதான வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு, போபாலில் உள்ள இவர்கள் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது.
புதுடெல்லி:
மத்தியபிரதேசத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். தம்பதி, அரவிந்த் ஜோஷி- டினூ ஜோஷி. இத்தம்பதி மீதான வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு, போபாலில் உள்ள இவர்கள் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. அதில், கணக்கில் வராத ரூ.3.30 கோடி கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
பின்னர், வருமானத்துக்கு அதிகமாக ரூ.41.87 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர்கள் மீது மத்தியபிரதேச லோக் ஆயுக்தா காவல் துறையினர் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்தனர்.
ஊழல் புகார் தொடர்பாக ஐ.ஏ.எஸ். தம்பதி கடந்த 2014-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த தம்பதியின் ரூ.7.12 கோடி சொத்துகளை அமலாக்க இயக்ககம் ஏற்கனவே முடக்கியிருந்தது.
இந்நிலையில், மாநில காவல் துறையினர் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த தம்பதியின் ரூ.1.49 கோடி மதிப்புள்ள 32 சொத்துகளை ஜப்தி செய்திருப்பதாக அமலாக்க துறை நேற்று தெரிவித்தது.
முறைகேடாக ஈட்டிய பணத்தில், முன்னாள் ஐ.ஏ.எஸ். தம்பதி தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர் என அமலாக்க துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[embedded content]
Source: Maalaimalar