Press "Enter" to skip to content

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது – குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

சென்னை:

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, பள்ளிக்கல்வித் துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசி வருவதால், உயர் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் நடைபெற்று வருவதாலும், தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாலும், கீழ்க்கண்ட நெறிமுறைகளை ஒவ்வொரு பள்ளியும் கவனத்துடன் பின்பற்ற வேண்டும்.

* குழந்தைகளை கண்டிப்பாக சமூக இடைவெளி விட்டு அமரவைக்க வேண்டும். அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில், அதற்கேற்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

* அனைத்து குழந்தைகளும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். அதேபோல் அவர்களின் உடல் வெப்பநிலையையும் பரிசோதிக்க வேண்டும்.

* ஒவ்வொரு வகுப்பு அறையிலும் கிருமிநாசினி இருக்கவேண்டும். அதன்மூலம் பிள்ளைகள் கைகளை சுத்தமாக வைத்திருப்பதை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

* பிள்ளைகள் வகுப்பறைக்குள் வரும்போதும், வெளியே செல்லும்போதும் ஒருவரையொருவர் முட்டிமோதி கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

* மதிய உணவு நேரத்தில் பிள்ளைகள் தனித்தனியாக அமர்ந்து உணவு உட்கொள்வதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

* வகுப்பறை ஜன்னல் கம்பிகள், கதவுகள் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் மற்றும் இடங்களில், தேவைப்படக்கூடிய குறிப்பிட்ட இடைவெளியில் தினந்தோறும் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களுக்கு தெளிவாக தெரியும்வண்ணம் கொரோனா குறித்த விழிப்புணர்வு விஷயங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அவசரகாலத்துக்கான தொலைபேசி எண்கள் அடங்கிய பதாகைகள் அல்லது விவர அட்டைகளை தொங்கவிட வேண்டும்.

* ஆசிரியர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றுவது மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

* வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் சரியாக பின்பற்றுகின்றனவா என அவ்வப்போது ஆய்வு நடத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை குறித்து அரசு அதிகாரபூர்வமாக தெரிவிக்காத நிலையில், தற்போது தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கொரோனா இரண்டாவது அலை வீசிவருவதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »