Press "Enter" to skip to content

கன்னியாகுமரி தேர்தல் களத்தில் கலக்கும் விஜய் வசந்த்

2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழக சட்டசபை தேர்தலுடன், நாட்டின் கடைக்கோடி பாராளுமன்ற தொகுதியான கன்னியாகுமரியில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தொகுதியின் எம்பி வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானதையடுத்து, இடைத்தேர்தல் நடக்கிறது. தந்தை விட்டுச் சென்ற பணியை தொடர விரும்பிய விஜய் வசந்துக்கு கட்சி தலைமை வாய்ப்பு கொடுக்க, தேர்தல் களத்தில் இறங்கி சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார் விஜய் வசந்த்.

2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இத்தொகுதியில் வசந்தகுமார் சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே இலக்கை எட்டிப்பிடிக்கும் வியூகத்துடன் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் விஜய் வசந்த். குமரி மாவட்ட வளர்ச்சிக்காக பாடுபட்ட தன் தந்தை விட்டுச் சென்ற பணியை நிறைவேற்ற தனக்கு வாய்ப்பு தரும்படி பிரசாரம் செய்துவருகிறார்.

கடந்த முறை வாய்ப்பை இழந்த பாரதிய ஜனதா கட்சியின் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த முறை மீண்டும் போட்டியிடுகிறார். அனுபவம் வாய்ந்த அவரை, நிச்சயம் தோற்கடிக்க முடியும் என்கிறார் விஜய் வசந்த். முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜய் வசந்த், தனது தந்தை வசந்தகுமாரின் செல்வாக்கு, அவர் மேற்கொண்ட நலத்திட்ட பணிகள் நிச்சயம் கை கொடுக்கும் என்று நம்புகிறார்.

சமூக வலைதளங்களில் பிரபலமான விஜய் வசந்த் அவர்கள், மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறார். மக்களின் கருத்துகளை கேட்டு அறியவும் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் #AskVijayVasanth என்ற  ஹாஷ்டாகில் அவர் ஃபேஸ்புக் (https://m.facebook.com/iamvijayvasanth?tsid=0.04045457180250733&source=result)  மற்றும் ட்விட்டரில் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வேண்டுகோளுக்கிணங்க மக்கள் அவரிடம் தொடர்ந்து தங்கள் கேள்விகளையும், கோரிக்கைகளையும் முன்வைக்கின்றனர். விஜய் வசந்த் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் அளித்து வருகிறார். அரசியல், திரைப்படம், தனிப்பட்ட வாழ்க்கை… என பலதரப்பட்ட கேள்விகள் எழுப்பினாலும், தனக்கே உரிய மென்மையான பாணியில் விஜய் வசந்த் பதில் கூறி மக்களை ஆச்சரியப்பட வைக்கிறார்.

சற்று தரக்குறைவாக பேசிய ஒருவரிடம் மிக அன்பாக பேசி, நமக்குள் இருப்பது அரசியல் வேறுபாடு மட்டுமே தனிப்பட்ட பகை அல்ல என்பதை உணர்த்தியது, அவரது அரசியல் பண்பை வெளிப்படுத்தியது. இதனால், தரக்குறைவாக பேசிய அந்த நபர் தனது பதிவை நீக்கிவிட்டார்.

இதேபோல், வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த ஒருவர், எம்பி ஆனபிறகு கட்சி தாவ மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று மறைமுகமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த விஜய் வசந்த்… ‘எனது தந்தையின் பெயர் வசந்த குமார்’ என ஒற்றை வரியில் கூறியது அவரது கொள்கைப் பிடிப்பையும் காங்கிரஸ் மீதான பற்றையும் உணர்த்தியது.

கன்னியாகுமரி மக்களுக்காக என்னென்ன திட்டங்கள் கொண்டு வருவேன் என்பதையும் அவருடைய கனவுகள் என்னென்ன என்பதையும் மிகத் தெளிவாக இந்த கருத்துப் பதிவின் மூலம் தெரிவிக்கிறார்.

கூடவே இருந்து கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து மக்களோடு மக்களாக, மக்களுக்காக பணியாற்றுவேன் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்கிறார். அரசியலுக்கு வந்த குறுகிய காலத்தில் இவ்வளவு பக்குவம், அரசியல் நாகரீகம் மற்றும் யதார்த்தமாக தனது கருத்தை வெளிப்படுத்தும் இளம் தலைவரை பார்க்க முடியுமா? என்று ஆச்சரியப்பட வைக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக விஜய் வசந்த் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் ஆதரவு அதிகரித்தவண்ணம் உள்ளது. பெருந்தலைவர் காமராஜர் மற்றும் புன்னகை மன்னன் வசந்தகுமாரின் ஆசியோடு சிறப்பான வெற்றியை அடைவீர்கள் என மக்கள் வாழ்த்துவதை பார்க்க முடிகிறது. இந்த அன்பும் ஆதரவும் வாக்குகளாக மாறி, தந்தை வழியில் அவரும் வெற்றிக்கொடி நாட்ட வாழ்த்துவோம்!

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »