சேலம் வடக்கு தொகுதி, தெற்கு தொகுதி, மேற்கு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
சேலம்:
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.
நேற்றிரவு பள்ளி பாளையத்தில் அமைச்சர் தங்கமணிக்கு ஆதரவாக பிராசரம் செய்த எடப்பாடி பழனிசாமி இரவில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்தார். இன்று காலை மதுரைக்கு புறப்பட்டு சென்ற அவர் அங்கு பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அங்கு பிரசாரத்தை முடித்து விட்டு மாலையில் சேலத்திற்கு திரும்புகிறார்.
பின்னர் சங்ககிரி, ஆட்டையாம்பட்டியில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து சேலம் கோட்டையில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதில் சேலம் வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜி. வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., தெற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பாலசுப்பிரமணியம், மேற்கு தொகுதி பா.ம.க. வேட்பாளர் இரா. அருள் ஏற்காடு வேட்பாளர் சித்ரா எம்.எல்.ஏ., ஆத்தூர் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசங்கர், கெங்கவல்லி அ.தி.மு.க. வேட்பாளர் நல்லதம்பி ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.
இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கிறார்கள். இதையொட்டி அவர் செல்லும் வழிகளில் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar