Press "Enter" to skip to content

கும்ப மேளாவில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்… ஹரித்வாரில் 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா

பொதுமக்கள் தொடர்ந்து கும்பலாக நின்று நதியில் நீராடியதால், அவர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

ஹரித்வார்:

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரின் கங்கை நதிக்கரையில் கடந்த 1ம் தேதி முதல் கும்ப மேளா திருவிழா நடைபெற்று வருகிறது. 30-ம் தேதி வரை கும்ப மேளா நடைபெற உள்ளது. ஏப்ரல் 12, 14 மற்றும் 27 ஆகிய தேதிகள் புனித நீராடலுக்கு முக்கிய நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள், துறவிகள் மற்றும் அகோரிகள் புனித நீராடுகின்றனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கும்ப மேளாவில் பங்கேற்க வருபவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும், அந்த சான்றிதழ் 72 மணி நேரத்துக்குள் வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும், கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் கும்ப மேளாவிற்கு வரும் பொதுமக்கள் முக கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தொடர்ந்து அலட்சியாக உள்ளனா. 

குறிப்பாக புனித நீராடரின்போது ஒரே சமயத்தில் பல்லாயிக்கணக்கான மக்கள் கங்கை நதிக்கரையில் திரண்டதால் சமூக இடைவெளி என்பதே இல்லாமல் போனது. இன்றும் புனித நீராடலின்போது கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. பொதுமக்கள் தொடர்ந்து கும்பலாக நின்று நதியில் நீராடியதால், அவர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

இந்நிலையில், ஹரித்வாரில் மட்டும் கடந்த 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை 408 பேருக்கும், செவ்வாய்க்கிழமை 594 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தினசரி பாதிப்பு 1900க்கும் மேல் பதிவாகிறது.  

உத்தரகாண்டில் இதுவரை 1.12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 1780 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »