Press "Enter" to skip to content

உடையார்பாளையம் அருகே மது பாட்டிலில் இறந்து கிடந்த பாம்பு குட்டி

உடையார்பாளையம் அருகே மதுபாட்டிலில் பாம்பு குட்டி கிடந்தது. அந்த மதுவை குடித்த விவசாயி மயக்கம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடையார்பாளையம் :

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் சுரேஷ் (வயது 36). விவசாயியான இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு.

இந்தநிலையில் இவர் சுத்தமல்லி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மதியம் மது வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் பாட்டிலை திறந்து ஒரு டம்பளரில் பாதி அளவு மதுவை ஊற்றி குடித்தார்.

தொடர்ந்து அவர் மீதமுள்ள மதுவை குடிப்பதற்காக டம்பளரில் ஊற்றும்போது மது பாட்டிலில் பாம்பு குட்டி ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அவர்அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தகவலை தெரிவித்தார். உடனடியாக அவர்கள் சுரேசை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மது பாட்டிலில் பாம்பு குட்டி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி குடிமகன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »