Press "Enter" to skip to content

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள் – தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி அதிகபட்சமாக 6,993 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் வரை இதுதான் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று எண்ணிக்கையாக பதிவாகி இருந்தது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

மராட்டியம், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார் கர்நாடகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பலர் உயிரிழக்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி அதிகபட்சமாக 6,993 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் வரை இதுதான் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று எண்ணிக்கையாக பதிவாகி இருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து 7,819 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2,564 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இது மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10 சதவீத வளர்ச்சியில் கொரோனா பரவல் உள்ளது.

மேலும், சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் வழக்கு ஒன்றில் பதில் அளித்த தமிழக அரசு, கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளதாக தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா பரவல் தடுப்புக்காக சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து உள்ளது.

திருமணம், இறுதிச்சடங்கு, மதம் தொடர்பான கூட்டங்கள் உள்பட பல நிலைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு தடுப்பூசி போடுவதிலும் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது; சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது, போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா? என்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »