Press "Enter" to skip to content

பிரான்சில் இருந்து மேலும் 6 ரபேல் விமானங்கள் ஏப்ரல் 21ம் தேதி இந்தியா வருகின்றன

புதுடெல்லி:

இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் ரூ.56 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் 2016ல்  போடப்பட்டது. ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரபேல் விமானங்கள் தற்போது அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. 

ஐந்து ரபேல் ஜெட் விமானங்களின் முதல் தொகுதி ஜூலை 29 அன்று இந்தியா வந்து சேர்ந்தது. நவம்பர் 3-ம் தேதி மூன்று ரபேல் ஜெட் விமானங்களின் இரண்டாவது தொகுதி இந்தியாவுக்கு வந்தது. மூன்றாவது தொகுதி  ஜனவரி 27 அன்று வந்து சேர்ந்தது.

ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டபடி 4-வது தொகுதி 3 ரபேல் விமானங்களை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது.  கடந்த சில வாரங்களுக்கு முன் அவை இந்தியா வந்தடைந்தன. இந்த 3 விமானங்களுடன் சேர்த்து நம் விமானப் படையில் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்திய விமானப்படை தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா ஏப்ரல் 20-ம் தேதி பிரான்ஸ் நாட்டுக்குச் செல்கிறார். ஏப்ரல் 23 வரை அங்கு அவர் இருப்பார். 

முன்னதாக, 6 ரபேல் போர் விமானங்கள் ஏப்ரல் 28 அன்று இந்தியாவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் அவரது பயணத்தை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ஒரு வாரத்திற்கு முன்னதாக தள்ளிவைக்கப்பட்டது.

ராகேஷ் பதாரியா  பிரான்ஸ் பயணத்தின் போது பிரெஞ்சு ரபேல் படைப்பிரிவைப் பார்வையிடுகிறார். பாரிசில் புதிதாக நிறுவப்பட்ட விண்வெளி கட்டளைக்கு செல்வார்.

இந்திய விமானப்படைத் தலைவர் ராகேஷ் பதாரியா ஏப்ரல் 21-ம் தேதி தென்மேற்கு பிரான்சில் உள்ள மெரிக்னாக்-போர்டோ விமான நிலையத்திலிருந்து ஆறு ரபேல் போர் விமானங்கள்  கொடியசைத்து இந்தியா அனுப்பி வைக்க உள்ளார். இவை வந்து சேர்ந்த பிறகு, மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஹசிமரா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளன.

இதன்மூலம், இந்த மாதத்துக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 20 ஆக உயரும். மீதமுள்ள விமானங்களும் அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதன் மூலம், இந்தியாவிடம் விமானப்படை பெரும் பலத்தை பெறும். கிழக்கு லடாக்கில் சீனாவுடன் சமீபத்தில் போர் பதற்றம் ஏற்பட்ட போது, இந்த விமானங்கள் கண்காணிப்புக்காக பயன்படுத்தப்பட்டன.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »