Press "Enter" to skip to content

திட்டமிட்டபடி மே 2ல் வாக்கு எண்ணிக்கை – வெற்றி கொண்டாட்டத்துக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி மே 2-ம் தேதி நடைபெறுமென தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியா முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்தி முடித்துள்ளது.

8 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தில் 7 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 8-வது இறுதிகட்ட தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

ஒரு சின்ன (மினி) பொதுத்தேர்தல் போன்று அமைந்துவிட்ட இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை வரும் 2-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வழக்கமாக வாக்கு எண்ணிக்கையின் போக்கைக்கண்டு வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை வந்து விட்டாலே அரசியல் கட்சித் தொண்டர்கள் கட்சி அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் கூடி பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஆடிப்பாடியும் வெற்றி கொண்டாட்டங்களை தொடங்கி விடுவார்கள். வெற்றி பெற்ற பின்னரோ கொண்டாட்டங்களுக்கு கேட்கவே வேண்டாம்.

ஆனால் இம்முறை இந்த வெற்றி கொண்டாட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றும், அதையொட்டி போடப்பட்டுள்ள ஊரடங்குகள், கட்டுப்பாடுகள் பெரும் தடையாக அமைந்துவிட்டன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்கு தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

இதையொட்டி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

நாடெங்கும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, வாக்கு எண்ணிக்கையின்போது இன்னும் கடுமையான ஏற்பாடுகளை செய்வதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து வெற்றி ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெற்றி பெற்ற வேட்பாளர் அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற வரும்போது அவருடன் 2 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தவில்லை என சென்னை உயர்நீதிநீதி மன்றம் நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்தது. அதுட்டுமின்றி, நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றின் இரண்டாவது அலை தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் மட்டுமே பொறுப்பு எனவும் கூறியது.

தேர்தல் ஆணையம் மிகுந்த பொறுப்பற்ற ஒரு அமைப்பு என்றும் சாடியது. இன்னும் ஒரு படி மேலே போய், தேர்தல் ஆணையம் அதிகாரிகள் மீது கொலைக்குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் எனவும் கருத்து தெரிவித்தது. அத்துடன் மே 2-ம் தேதி நடைபெறக்கூடிய வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கூட தயங்கமாட்டோம் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

வாக்கு எண்ணிக்கை நாளில் பின்பற்ற உள்ள கொரோனா கால கட்டுப்பாட்டு விதிமுறைகள் தொடர்பாக 30-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறும் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிநீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்த சூழ்நிலையில்தான் வாக்கு எண்ணிக்கை நாளில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »