Press "Enter" to skip to content

பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறுமா?: சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் இன்று ஆலோசனை

பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக, சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை:

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக ஏற்கனவே சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 பொதுத்தேர்வும் ரத்துசெய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்துசெய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து அறிவித்து வருகின்றன. அதன்படி, கோவா, குஜராத், அரியானா, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் பிளஸ்-2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.

சத்தீஸ்கரில் பிளஸ்-2 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பீகார், கேரள மாநிலங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்திமுடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்காமல் உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பிளஸ்-2 தேர்வு பற்றி சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார். தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடனும் ஆலோசிக்கப்படும் என்றும், அனைத்து தரப்பினர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் முதல்-அமைச்சர் உரிய முடிவை அறிவிப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தலைமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, பா.ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாலாஜி உட்பட 13 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »