Press "Enter" to skip to content

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது- இந்தியா கொரோனா அப்டேட்ஸ்

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,14,460 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,88,09,339 ஆக உயர்ந்துள்ளது. 

நாடு முழுவதும் ஒரே நாளில் 2677 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,46,759 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,69,84,781 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,89,232 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.20 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 93.67 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 52 நாட்களுக்கு பிறகு 15 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 14,77,799 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 23,13,22,417 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 36,47,46,522 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 20,36,311 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »