தன் வாகன அணிவகுப்பு மீது கற்களை வீசி தாக்கியவர்களை மன்னித்துவிட்டதாகவும், அவர்கள் மீது கொடுத்த புகாரை திரும்ப பெறுவதாகவும் எம்எல்ஏ கூறினார்.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள், டோகானா தொகுதி எம்எல்ஏ தேவேந்திர சிங் பாப்லியின் தேரை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, எம்எல்ஏவுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எம்எல்ஏ கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எம்எல்ஏவின் தேரை முற்றுகையிட்டு தாக்கியதாக விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் நடந்த அன்று விவசாயிகளிடம் கடுமையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் எம்எல்ஏ. அத்துடன், தன் வாகன அணிவகுப்பு மீது கற்களை வீசி தாக்கியவர்களை மன்னித்துவிட்டதாகவும், அவர்கள் மீது கொடுத்த புகாரை திரும்ப பெறுவதாகவும் கூறினார்.
எம்எல்ஏ தனது புகாரை திரும்ப பெறுவதாக கூறி, மன்னிப்பு கேட்டபிறகும் கைது செய்யப்பட்ட விவசாயிகளை காவல் துறையினர் ஏன் விடுவிக்கவில்லை? என விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயித் கேள்வி எழுப்பினார். அவர்களை விடுதலை செய்யுங்கள் அல்லது எங்களையும் கைது செய்யுங்கள் என்றும் அவர் கூறினார்.
எம்எல்ஏ பாப்லி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யாவிட்டால் நாளை மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar