Press "Enter" to skip to content

இங்கிலாந்தில் ஜி-7 உச்சிமாநாடு தொடக்கம் – கொரோனாவுக்கு பின் உலக தலைவர்கள் நேரில் சந்திப்பு

உலகின் பிற நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

லண்டன்:

தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கனடா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கியது ஜி-7 கூட்டமைப்பு.

இந்தக் கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு இங்கிலாந்தின் காா்ன்வால் மாகாணத்தில் நேற்று தொடங்கியது.

கடந்த 2 ஆண்டுகளில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி வாயிலாக அல்லாமல் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இத்தாலி பிரதமர் மரியோ தராகி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் மற்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயென், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

காா்ன்வால் மாகாணத்தின் செயின்ட் ஐவ்ஸ் நகரில் உள்ள எழில் கொஞ்சும் காா்பில் பே பகுதியில் நேற்று தொடங்கிய இந்த மாநாடு இன்றும், நாளையும் தொடர்கிறது.

முன்னதாக, நேற்று இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பாக ஜி-7 நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில், கதவுகள் மூடப்பட்ட அறைக்குள் ஜி-7 மாநாட்டின் முதல் நாள் கூட்டம் தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா தொற்றால் உலகம் எதிர்கொண்ட மோசமான விளைவுகள் பற்றியும், உலக நாடுகளின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட வேண்டியதின் அவசியம் குறித்தும் பேசினார். தொடர்ந்து ஒவ்வொரு தலைவர்களாக தங்களின் தொடக்க உரையை வழங்கினர்.

பரபரப்பான சூழலில் தொடங்கியுள்ள இந்த மாநாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீா்வு காண வேண்டிய சவாலை ஜி-7 நாடுகளின் தலைவா்கள் எதிா்கொண்டுள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் உள்ளிட்ட உதவிகளை பணக்கார நாடுகள் வழங்கி உதவ வேண்டும் என்று சா்வதேச நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், இந்த மாநாடு நடைபெறுவதால் கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

கொரோனாவுக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் சர்வதேச பிரச்சினையாக இருப்பது பருவநிலை மாற்றம். எனவே பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இந்த மாநாட்டில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பல முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனின் முதல் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »