Press "Enter" to skip to content

புதுவையில் கொரோனா 3-ம் அலை அறிகுறி: பொதுமக்கள் பீதி

கொரோனா குறைந்து வரும் வேளையில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உருமாற்றம் அடைந்துள்ளதால் ஓரிரு மாதங்களில் 3-ம் அலை பரவ தொடங்கும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கியது.

பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் அலை பரவ தொடங்கியது. 2-ம் அலையில் முதியோர் மட்டுமின்றி நடுத்தர வயதினரும் இளைஞர்களும் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகினர்

நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று பரவி அதிகபட்சமாக நாளுக்கு 30 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அமல்படுத்தியது.

மேலும் தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 367 பேரை பரிசோதித்ததில் 103 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது.

தொற்று சதவீதம் 1.62 சதவீதமாக குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர் கடந்த ஜூன் 6-ந் தேதி வரை மாநிலத்தில் 4 ஆயிரத்து 719 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா குறைந்து வரும் வேளையில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உருமாற்றம் அடைந்துள்ளதால் ஓரிரு மாதங்களில் 3-ம் அலை பரவ தொடங்கும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். 3-ம் அலையில் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் 16 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் புதுவையில் 3-ம் அலை தொடங்கி விட்டதோ என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் இதுவரை 16 குழந்தைகளுக்கு  கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 1 வயது முதல் 5 வயது உள்ள 16 குழந்தைகளுக்கு தொற்று உள்ளது. மீதம் உள்ள 5 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்க்கு பிறந்தவர்கள். இந்த குழந்தைகளை பரிசோதனை செய்ததில் ஒரு குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. மற்ற 4 குழந்தைகளுக்கு பரிசோதனை முடிவு வெளிவர வேண்டி உள்ளது.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம். பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நோய் தொற்று வராது.

மேலும் குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை ஆஷா பணியாளர்கள், அங்கன் வாடி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தொற்று பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 60 படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் தயாராக உள்ளது. புதுவையில் 5 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »