Press "Enter" to skip to content

ஆடவர் ஹாக்கி- ஜெர்மனியை துவம்சம் செய்து வெண்கல பதக்கம் வென்றது இந்தியா

வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜெர்மனியை வீழ்த்தி பதக்கம் வென்றது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில்  வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெர்மனி வீரர் டிமுர் ஒருஸ் கோல் அடித்தார். இதனால் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் முதல் கால் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

2-வது கால் பகுதி ஆட்டத்தில் ஜெர்மனிக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் அதாவது 17-வது நிமிடத்தில் சிம்ரஞ்ஜீத் சிங் அபாரமாக கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என முன்னிலைப் பெற்றது.

ஜெர்மனி வீரர் ஃபர்க் 25-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக ஹர்திக் சிங் மற்றும் ஹர்மன்ப்ரீத் சிங் முறை 27 மற்றும் 29-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினர். இதனால் 2-வது கால் பகுதி ஆட்டம் முடிவில் ஸ்கோர் 3-3 என சமநிலை பெற்றது.

3-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களின் ஆட்டம் அபாரமாக இருந்தது. 3-வது கால் பகுதி ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே, அதாவது ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ருபீந்தர் பால் சிங் கோல் அடித்தார். அதோடு அல்லாமல் 34-வது நிமிடத்தில் சிம்ரஞ்ஜீத் சிங் கோல் அடித்தார். இதனால் 3-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்தியா 5-3 என முன்னிலைப் பெற்றிருந்தது.

4-வது மற்றும் கடைசி கால் பகுதி ஆட்டம் தொடங்கியது. 48-வது நிமிடத்தில் ஜெர்மனியின் வண்ட்பெடர் கோல் அடிக்க இந்தியாவின் ஸ்கோர் 5-4 என ஆனது.

ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்ய, இந்திய வீரர்கள் தடுப்பதில் ஆர்வம் காட்டினர். 10-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு சூப்பர் வாய்ப்பு கிடைத்தது. கோல் எல்லையில் ஜெர்மனி கோல் கீப்பரை தவிர எதிரணி வீரர்கள் யாரும் இல்லை. ஆனால் இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடிக்க தவறினார்.

7 நிமிடம் இருக்கும்போது ஜெர்மனிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதில் கோல் அடிக்க  விடாமல் இந்திய வீரர்கள் அருமையாக தடுத்தனர்.

3-வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறையில் இந்திய வீரர்கள் சிறப்பாக தடுத்தனர். கடைசி ஒன்றரை நிமிட ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்திய வீரர்கள் ஜெர்மனியை கோல் அடிக்க விடாமல் சிறப்பாக தடுத்தனர். ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் ஜெர்மனி கோல் அடிக்க முயற்சி செய்தது.

7 வினாடிகள் இருக்கும்போது ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதையும் இந்திய வீரர்கள் முறியடிக்க 5-4 என இந்தியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

இதன் மூலம் 41 வருடத்திற்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தை ருசித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »