பாரா ஒலிம்பிக் வீரர்களது சாதனை, ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் 19 பதக்கங்களை குவித்தனர். நாடு திரும்பிய 54 பேர் கொண்ட இந்திய அணி, பிரதமர் மோடி அழைப்பின்பேரில், கடந்த வியாழக்கிழமை அவரது வீட்டுக்கு சென்றது.
மோடியுடன் இந்திய அணி வீரர்கள் உரையாடினர். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட காணொளி, நேற்று பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிடப்பட்டது.
உங்களின் விளையாட்டு செயல்பாடு பாராட்டத்தக்கது. பல்வேறு சிரமங்களை கடந்து சாதித்து இருக்கிறீர்கள். உங்கள் மனஉறுதியையும் பாராட்டுகிறேன். உங்கள் அனைவராலும் நான் ஊக்கம் பெற்றேன்.
உங்களது சாதனை, ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். வளரும் விளையாட்டு வீரர்களும் தைரியம் அடைவார்கள். விளையாட்டு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தங்களுக்கு அழைப்பு விடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு பாரா ஒலிம்பிக் வீரர்கள் நன்றி தெரிவித்தனர். பாரா ஒலிம்பிக் போட்டியில் தாங்கள் பயன்படுத்திய விளையாட்டு உபகரணத்தில் கையெழுத்திட்டு, மோடிக்கு பரிசாக அளித்தனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar