Press "Enter" to skip to content

தமிழகத்தில் 10-ந்தேதி மீண்டும் ஒரு மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அம்மா உப்பு, அம்மா காய்கறிகள் அங்காடி, அம்மா கூட்டுறவு அங்காடியில் மருந்து மாத்திரைகள், அம்மா அங்காடியில் அரிசி என்றெல்லாம் ஆரம்பித்தார்கள். ஆனால் இப்போதும் அவை எங்கும் இயங்கவில்லை.

சென்னை :

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக கூட்டரங்கில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று நாள்தோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பயனாளிகளைக் கண்டறிந்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் கடந்த 2011-ம் ஆண்டுக்கு பின்னர் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் நாளை (இன்று) சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஆண்டுக்கு 1,240 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மருத்துவ முகாம்களில் குழந்தை நலம், மகப்பேறு, இருதய நோய் உள்ளிட்ட 16 சிறப்பு மருத்துவர்களால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிறப்பான சிகிச்சைகள் அளிக்க உயர் ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரைசெய்யப்பட இருக்கின்றன.

தொடர்ந்து மூன்று வாரங்களாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மிகச்சிறப்பாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலான வகையில் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளதால், வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது.

தொடர்ந்து அக்டோபர் 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் பெரிய அளவிலான 4-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்துக்கு, நிதிநிலை அறிவிப்பில் 4 ஆயிரத்து 800 செவிலியர்களை நியமிப்பதாக அறிவித்து உள்ளோம். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அம்மா சின்ன (மினி) கிளினிக் தற்போது அவசியம் இல்லை. விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்டவைதான் அவை. அம்மா உப்பு, அம்மா காய்கறிகள் அங்காடி, அம்மா கூட்டுறவு அங்காடியில் மருந்து மாத்திரைகள், அம்மா அங்காடியில் அரிசி என்றெல்லாம் ஆரம்பித்தார்கள். ஆனால் அவை ஆரம்பித்ததோடு சரி. இப்போதும் எங்கும் அவைகள் இயங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »