கால்நடை மருத்துவமனை, வேளாண் விரிவாக்க மையம், கல்லூரி விடுதி கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தர்மபுரி:
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய தாய், சேய் சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ரூ.12 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அவசரகால தாய், சேய் சிகிச்சை மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கீழ் தளம் மற்றும் 4 அடுக்குகளை கொண்ட இந்த கட்டிடத்தில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. இந்த மைய கட்டிடத்தில் உள்ள அனைத்து அறைகளும் பளிங்கு கற்களால் அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தளத்திலும் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. அதன்படி கீழ் தளத்தில் நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் காத்திருப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் அவசர சிகிச்சை பகுதி மற்றும் பிரசவ அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் முதல் தளத்தில் அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவும், 2-வது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவும், 3-வது தளத்தில் பிரசவத்துக்கு பின் கவனிப்பு பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரைத்தளத்தில் வரவேற்பாளர் மையம், உதவி மையம் மற்றும் பதிவு மையம் ஆகியவை கணினி மற்றும் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவி மற்றும் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். அதன் விவரம் வருமாறு:
* 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 7 கிராம ஊராட்சி தலைவர்களுக்கு பரிசு வழங்கினார்.
* கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
* கால்நடை மருத்துவமனை, வேளாண் விரிவாக்க மையம், கல்லூரி விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார்.
* பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.10 கோடியிலான 11 கட்டிடங்கள், ஆய்வகங்களை திறந்து வைத்தார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar