தடை விதிப்பு குறித்த தகவல் அறியாத பலர் அதிகாலையிலேயே அம்மா மண்டபம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பலர் போலீசாரிடம் வேண்டுகோளாக கேட்டும் அனுமதிக்கப்படவில்லை.
திருச்சி
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளாய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில்நீர் நிலைகளில் புனித நீராடி கோவில்களில் பக்தர்கள் பார்வை செய்வது வழக்கம். அதேபோல் முன்னோர்கள் நினைவாக நீர் நிலைகளின் அருகில் தர்ப்பணம் கொடுத்தும் வழிபடுவார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறிய மற்றும் பெரிய கோவில்களில் தர்ப்பணம் கொடுக்கவும், பார்வை செய்யவும் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளாய அமாவாசை தினத்தில் லட்சக்கணக்கானோர் கூடுவார்கள். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டவாறு செல்கிறது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பால் அம்மா மண்டபம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அந்த பகுதி தடுப்பு கட்டைகள் கொண்டு மூடப்பட்டு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தடை விதிப்பு குறித்த தகவல் அறியாத பலர் அதிகாலையிலேயே அம்மா மண்டபம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பலர் போலீசாரிடம் வேண்டுகோளாக கேட்டும் அனுமதிக்கப்படவில்லை.
இதற்கிடையே பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் எள், அரிசி மாவுடன் சேர்த்த பிண்டங்களை அருகில் உள்ள குழாய்களில் கரைத்து விட்டு வீடு திரும்பினர்.
இதேபோல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள கருட மண்டபம், அய்யாளம்மன் படித்துறை மற்றும் முசிறி, தொட்டியம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி பாயும் இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதோடு, அங்கு காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
ஆனால் திருச்சி மாவட்டத்தில் முசிறி, தொட்டியம், கரூர் மாவட்டத்தில் நொய்யல், வேலாயுதம்பாளையம், நெரூர், வாங்கல், குளித்தலை, தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி கரையோரங்களில் திரண்ட பொதுமக்கள் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar