Press "Enter" to skip to content

500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்- ஐ.நா. எச்சரிக்கை

பருவநிலை மாற்றம், பெருவெள்ளம் மற்றும் வறட்சி போன்ற நீர் தொடர்பான ஆபத்துகளின் உலகளாவிய அபாயத்தை அதிகரிக்கிறது.

நியூயார்க்:

உலகின் பருவநிலை அதிவேகமாக மாறி வருகிறது. அதிகரிக்கும் வாகன மற்றும் தொழிற்சாலைப் புகை காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக உலக அளவில் புவி வெப்பமயமாதல் உண்டாகிறது. இந்த பருவ நிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. வரக்கூடிய காலங்களில் பருவநிலை மாற்றம் உலகில் மிகவும் மேசாமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், எனவே பருவ நிலை மாற்றத்தை சரிசெய்ய உலக நாடுகள் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

2021-ம் ஆண்டுக்கான ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு வருகிற 31-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து பருவ நிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான முக்கியமான முடிவுகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் 2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்றில் எச்சரித்துள்ளது. ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு, ‘தண்ணீருக்கான பருவநிலை சேவைகள் நிலை 2021’ என்கிற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலக வானிலை அமைப்பின் பொதுச்செயலாளர் பேராசிரியர் பெட்டேரி தலாஸ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பருவநிலை மாற்றம், பெருவெள்ளம் மற்றும் வறட்சி போன்ற நீர் தொடர்பான ஆபத்துகளின் உலகளாவிய அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும் இதனால் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018-ம் ஆண்டில் இருந்து 360 கோடி மக்கள் ஆண்டுக்கு ஒரு மாதம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்தார்கள். 2050-ம் ஆண்டுக்குள் 500 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறை சிக்கலை எதிர்கொள்வார்கள்.

எனவே கூட்டுறவு நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த நீர், நிலையான வளர்ச்சி, பருவநிலை மாற்றக் கொள்கைகளை கடைபிடித்தல் மற்றும் பேரிடர் அபாய குறைப்பு ஆகியவை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். அதிகரித்து வரும் வெப்பநிலை உலகளாவிய மற்றும் பிராந்திய மழைப்பொழிவு மாற்றங்களை விளைவிக்கிறது, இது மழை வடிவங்கள் மற்றும் விவசாய பருவங்களில் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது, உணவு பாதுகாப்பு, மனித ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் நிலத்தின் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பு, மண்ணின் ஈரப்பதம், பனி உறைதல் உட்பட அனைத்து நீரின் தொகுப்பும் ஆண்டுக்கு 1 செமீ என்ற விகிதத்தில் குறைந்துள்ளது.

உலகளவில் தண்ணீர் பாதுகாப்பு, சேமிப்பு மோசமான நிலையில் இருக்கிறது. உண்மையக் கூறுவதென்றால், பூமியில் உள்ள தண்ணீரில் 0.5 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படாமலும், சுத்தமான நீராகவும் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீரை அசுத்தப்படுத்துவது, அதானால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது.

கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து, பெருவெள்ளம் தொடர்பான பேரழிவுகள் 134 சதவீதம் அதிகரித்துள்ளன. பெரும்பாலான பொருளாதார ரீதியான மற்றும் மனித உயிரிழப்புகள் ஆசியாவில்தான் நடந்துள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »