Press "Enter" to skip to content

கோவில் நிலங்களுக்கு வாடகை செலுத்த இணையதள வசதி- அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

திருக்கோவில் நிலங்கள் கண்டறியப்பட்டு காலியாக உள்ள இடங்களில் வேலி அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை:

சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று இணையவழி முறையில் திருக்கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதியை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்கள், மடங்கள், திருமடத்துடன் இணைந்த திருக்கோவில்கள், குறிப்பிட்ட அறக்கட்டளைகள், சமணத் திருக்கோவில்கள் மற்றும் இவற்றுடன் இணைந்த உபக்கோவில்கள் மொத்தம் 44,287 உள்ளன. இவற்றில் 5,509 அறநிறுவனங்கள் சொத்துக்களின் மூலம் வருமானம் ஈட்டக் கூடியவையாகவும், 38,778 அறநிறுவனங்கள் சொத்துக்கள் மூலம் வருவாய் ஈட்டாதவையாகவும் உள்ளன. இந்த அறநிறுவனங்களுக்கு ரூபாய் 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள், 22,600 கட்டிடங்கள், 33,665 காலிமனைகள் உள்ளடக்கிய 3,55,719 சொத்துக்கள் உள்ளன.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அறநிறுவனங்களுக்கு சொந்தமான அசையாச் சொத்துக்களை, பொது ஏலம், ஒப்பந்தம் மூலம் வாடகைக்கு குத்தகைக்கு வழங்குதல் குறித்து, விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இவ்விதிகளின்படி திருக்கோவில்களின் அசையாச் சொத்துக்கள் பொது ஏலம், ஒப்பந்தம் மூலம் வாடகைக்கு, குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்நிலங்களின் வாடகைதாரர் விவரம் கேட்பு வசூல் நிலுவைப் பதிவேட்டில் பதியப்படுகிறது.

திருக்கோவில் நிலங்களின் வாடகைத் தொகையினை முறையாக வசூல் செய்யவும், ஒளிவு மறைவு அற்ற வகையில் அமையும் வண்ணம் “கேட்பு, வசூல், நிலுவை” விவரம் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருக்கோவில் நிலங்களின் வாடகைதாரர்/ குத்தகைதாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை, குத்தகைத் தொகையினை இணையதளம் வாயிலாகவே செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. வாடகை குத்தகையை செலுத்த கடைசிநாள் 15-ந்தேதி ஆக இருந்தது. தற்பொழுது 110 நாட்கள் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நியாய வாடகை நிர்ணய குழு என விரைவில் குழு விரைவில் அமைக்கப்படும்.

கணினி மூலம் வாடகை, குத்தகை செலுத்த இயலாத குத்தகைதாரர், வாடகைதாரர்கள் வழக்கம் போல் திருக்கோவில் அலுவலகத்தில் தொகையை கணினி மூலம் செலுத்திச் சீட்டினைப் பெற்றுக்கொள்ளலாம். இம்முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஒவ்வொரு அறநிறுவனத்திற்கும் சொந்தமான அசையாச் சொத்துக்களின் மூலம் பெறப்படும் வருமானத்தினை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஏதுவாகும்.

மேலும், வசூல் முறையாக நடக்கிறதா என்பதனை தொடர்ந்து கண்காணித்து, வருமானம் ஈட்டாத சொத்துக்களை ஏலத்திற்கு, குத்தகைக்கு கொண்டு வந்து, அறநிறுவனங்களுக்கான வருவாயினைப் பெருக்கிட இயலும். முறையாக பணம் செலுத்தாத நபர்களின் விவரங்களையும் இணைய வழியாக தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் நிலுவை தொகையினை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வசூல் நிலுவை தொடர்பான புள்ளி விபரங்களை, முதல்- அமைச்சர் அலுவலகம், அறநிலையத்துறை அமைச்சர் அலுவலகம், முதன்மைச் செயலாளர், ஆணையர் ஆகியோர் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஏதுவாக அமையும். இந்நேர்வில், முறையாக குத்தகை,வாடகை செலுத்தாத இனங்களின் மீது துரித நடவடிக்கை எடுக்க முடியும்.

அறநிறுவனங்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களின் கேட்பு வசூல் நிலுவை விவரத்தை கணினி மயமாக்கி, திருக்கோவில்களின் கேட்பு நிலுவைகளை முறைப்படுத்துவதன் மூலம், அறநிறுவனங்களுக்கான வருமானத்தை பெருக்குவதுடன், வருமானத்தைக் கொண்டு திருக்கோவில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும்.

பக்தர்கள் எளிதாக இணையதள வசதியை பயன்படுத்தி வாடகை தொகையினை செலுத்திக் கொள்ளலாம். திருக்கோவில் நிலங்கள் கண்டறியப்பட்டு காலியாக உள்ள இடங்களில் வேலி அமைக்கப்பட்டு வருகிறது. 5000 ஏக்கருக்கு மேல் இடங்கள் ரோவர் கருவி மூலம் அளவிட்டு எச்.ஆர்.சி.இ. என்ற பெயருடன் பென்சிங் வேலி அமைக்கப்பட்டு பெயர் பலகையும் வைக்கப்பட்டு வருகிறது.

எத்தனை தடை வந்தாலும், 100 பா.ஜ.க. வந்தாலும் இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்கமுடியாது. ஏனென்றால் இந்த அரசை வழி நடத்துபவர் 50 ஆண்டுக்கால அரசியல் அனுபவம் கொண்டவர் முதல்-அமைச்சர், மத்திய அரசின் ஆணைப்படி தான் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் திறக்கப்படாமல் உள்ளது. அவர்கள் போராடுவது என்றால் மத்திய அரசுக்கு எதிராக தான் போராடவேண்டும்.

குயின்ஸ் லாண்ட் இடத்தை யாரென்று பாராமல் யாரிடமிருந்தாலும் இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி கால அவகாசத்திற்குள் மீட்போம். தொடர்ந்து சட்டபோராட்டம் நடத்தி மீட்போம். குயின்ஸ் லாண்ட் மீட்டால் நான் இந்து சமய அறநிலையத்துறை பற்றி பேசமாட்டேன் என்று ஒருவர் கூறினார். அவரிடம் தான் இனிமேல் கேட்க வேண்டும். பேசாமல் இருப்பாரா என்று இந்து சமய அறநிலையத்துறை அதன் பாதையில் சரியாக செல்கிறது.

சென்னையில் 2.0 திட்டத்தின் படி திருக்கோயில் குளங்களை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர், கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர்கள் சுகுமார், கல்பனா, மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் காவேரி மற்றும் தலைமையிட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »