Press "Enter" to skip to content

சென்னையில் உள்ள 403 அம்மா உணவகங்களில் விற்பனை அதிகரிப்பு

கடந்த மாதத்தில் அம்மா உணவகங்களை ஆய்வு செய்து சரி செய்யும் பணி நடந்தது. இதன் மூலம் ஒரே மாதத்தில் விற்பனை அதிகரித்து உள்ளது.

சென்னை:

சென்னையில் 403 அம்மா உணவகங்கள் மாநகராட்சி மூலம் நடத்தப்படுகின்றன. கடந்த சில வருடமாக அம்மா உணவகங்களில் விற்பனை சரிந்தது.

இதனால் மாநகராட்சிக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.

அம்மா உணவகங்களில் ஊழியர்கள் அதிகளவு இருப்பதால் அதனை சரிசெய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 4355 ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகிறார்கள்.

இதில் 170 அம்மா உணவகங்களில் சரியான அளவு ஊழியர்கள் உள்ளனர். 171 உணவகங்களில் 2 முதல் 5 பேர் வரை அதிகமாகவும் 60 அம்மா உணவகங்களில் 5 பேர் முதல் 10 பேர் வரை அதிகம் இருப்பதும் தெரிய வந்தது.

இவர்கள் யாரையும் பணியில் இருந்து நீக்காமல் அனைவருக்கும் வேலை கொடுக்கும் வகையில் சுழற்சி முறையில் ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட்டனர். கூடுதலாக இருந்த உணவகங்களில் ஊழியர்களுக்கு பணிகள் பரவலாக்கப்பட்டு விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

அதிகாலை 5 மணி முதல் பகல் 1 மணி வரை ஒரு ஷிப்டும், பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை மற்றொரு ஷிப்டும் ஒதுக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக தற்போது அம்மா உணவகங்களில் விற்பனை அதிகரித்து உள்ளது.

கடந்த ஆண்டுகளில் தினமும் 1.25 லட்சம் பேர் மட்டுமே உணவு சாப்பிட்டார்கள். ஆனால் தற்போதைய நடவடிக்கையின் மூலம் இது 1.73 லட்சமாக உயர்ந்து உள்ளது.

அம்மா உணவகங்களில் சாப்பிடுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரம் பேர் அதிகரித்து உள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த மாதத்தில் அம்மா உணவகங்களை ஆய்வு செய்து சரி செய்யும் பணி நடந்தது. இதன் மூலம் ஒரே மாதத்தில் விற்பனை அதிகரித்து உள்ளது.

தரமான உணவுகளை தயாரித்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அம்மா உணவகங்களில் பணியாற்றிய ஒருவரையும் பணியில் இருந்து நீக்கவில்லை. சம்பளமும் குறைக்கப்படவில்லை.

இன்னும் படிப்படியாக இதன் தரம் உயர்த்தப்படும். சரியான அளவில் பணியாளர்கள் நிர்ணயிக்கப்பட்டதால் செலவினம் குறைந்து உள்ளது. மாதத்திற்கு 1 கோடி ரூபாய் வீதம் ஆண்டுக்கு 12 கோடி செலவினம் குறைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »