Press "Enter" to skip to content

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு – வெளியே சுற்றினால் வழக்கு என காவல் துறையினர் எச்சரிக்கை

முழு ஊரடங்கில் உணவு விடுதிகள், சிற்றுண்டிகள் தங்களது சொந்த வாகனத்தில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி முதல் நாளை காலை 5 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மாநகர பேருந்துகள் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல ஆட்டோக்கள் ஓடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ தொடர் வண்டி சேவை நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமானம், தொடர் வண்டி பயணம் மேற்கொள்பவர்கள் சொந்த வாகனம் அல்லது வாடகை வாகனங்களில் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணத்தின்போது அதற்கான அனுமதிச்சீட்டை வைத்திருக்க வேண்டும்.

மின்சார தொடர் வண்டிகளை பொறுத்தவரை 50 சதவீதம் நாளை இயக்கப்படுகின்றன. 4 வழித்தடங்களிலும் குறைந்த அளவிலான சேவை இயக்கப்படும் என்றுதொடர்வண்டித் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய துறை ஊழியர்கள் செல்வதற்காக சேவை குறைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிகள் மட்டும் முழு அளவில் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயணிகள் தொடர் வண்டி நிலையங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

முழு ஊரடங்கான இன்று அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »