Press "Enter" to skip to content

கொரோனா பரவலை தடுக்க பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு

ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுமாறு அதிகாரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கடந்த 2 ஆண்டுகளாக மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உயிர் பலியாவது குறைந்து வந்தது. ஆனாலும் முக கவசம் அணியாமல் பலர் சுற்றி வருவதால் ஆங்காங்கே கொரோனா பரவி வந்தது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற கால கட்டத்திலும் கொரோனா பரவல் தினசரி பாதிப்பு 26 ஆயிரம் என்ற அளவில் உச்சத்தில் இருந்தது.

அதன் பிறகு கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஒரு சில மாதங்களில் கொரோனா பரவல் குறைந்தது.

இதனால் அரசு விதித்த கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக விலக்கி கொள்ளப்பட்டது. கொரோனா வெகுவாக குறைந்த காரணத்தால் சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி முதல் விலக்கி கொள்ளப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டாலும் மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து முக கவசம் கட்டாயம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் நிறைய பேர் இதை கடைப்பிடிப்பதில்லை.

இந்த சூழலில் கடந்த 1-ந்தேதி முதல் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஒமைக்கரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உருமாறி வேகமாக பரவி வருகிறது.

டெல்லி, அரியானா உள்பட வட மாநிலங்களிலும் கொரோனா பரவத் தொடங்கி விட்டது. இந்த கொரோனா இப்போது தமிழ்நாட்டிலும் பரவி வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை ஐ.ஐ.டி.யில் 1,420 பேரை சோதனை செய்ததில் 60 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி காணொலி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் காணொலி வாயிலாக இணைந்திருந்தனர்.

இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் மற்றும் வருவாய் பேரிடர் துறை உயர் அதிகாரிகள், காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் உருமாறிய கொரோனா பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மீண்டும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடதவர்களை தடுப்பூசி போட வருமாறு அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

வருகிற 8-ந்தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தவும் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர்கள் முன்னின்று செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுமாறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்த கூட்டம் கொரோனா தொடர்பாக காணொலி காட்சி மூலம் நடத்தப்படும் ஆலோசனை கூட்டமாக அமைந்திருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்ற போது கொரோனா பெரும் தொற்றின் 2-வது அலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்ததை நீங்கள் எல்லாம் நன்றாக அறிவீர்கள்.

அந்த இக்கட்டான நிலையிலே தேவைப்படக்கூடிய அனைத்து தீவிர நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்து அதை உங்களுடைய கடும் உழைப்பினால் கட்டுப்படுத்தி இருக்கிறோம். அதனால் ஏற்பட இருந்த பெரும் பாதிப்புகளையும் பெருமளவு நாம் குறைத்திருக்கிறோம்.

கடந்த 2021 ஜனவரி மாதம் நமது மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தக்கூடிய பணி தொடங்கியது. ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி செலுத்தக்கூடிய பணியில் இருந்த சுணக்கத்தை முழுமையாக அகற்றி தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக நாம் மாற்றிக்காட்டி இருக்கிறோம்.

அதில் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் பங்கு மிகவும் மகத்தானது. அதை யாராலும் மறக்க முடியாது. இதன் விளைவாகத்தான் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்த தகுதியான 6.33 கோடி மக்களில் 74.75 சதவீதம் பேருக்கு 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 91.5 சதவீதம் பேருக்கு முதல்தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுள்ள 41.66 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காரணமாக ஏற்பட்ட 3-வது சுணக்கம் பெருமளவில் இல்லை. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சிறிதளவு உயர்ந்தாலும் கூட இந்த தொற்று பாதிப்புகளை யும்,உயிரிழப்புகளையும் ஏற்படுத்தவில்லை.

இருந்தாலும் பல்வேறு முயற்சிகளின் காரணமாக பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து வெளிவந்து இயல்பு வாழ்க்கைக்கு நாம் திரும்பி வருகிறோம். பொருளாதாரம் மெல்ல வளர்ச்சி பெற்று வந்து கொண்டிருக்கிறது. மக்களுடைய வாழ்வாதாரமும் படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு வாரமாக மீண்டும் உயரத்தொடங்கி இருக்கிறது. ஒமைக்ரான் வைரசின் புதிய வகையால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது என மருத்துவ அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஒமைக்ரான் வைரசால் தொற்று எண்ணிக்கை உயர்ந்த போது ஏற்பட்டது போன்றே தற்போது உயிரிழப்புகள் எண்ணிக்கை உயரவில்லை. இருந்தாலும் நாம் அனைவரும் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்.

நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தி இருக்கிற அடிப்படையில் அவற்றை கட்டுப்படுத்திட நம் வசம் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசியே ஆகும். தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் சிலருக்கு தொற்று ஏற்பட்டாலும் கூட உயிரிழப்பு ஏற்படுவது மிக குறைவு.

எனவே தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்வதே நமது தேவையான கடமையாக இருந்துவிட வேண்டும். நமது மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்த போதிலும் இன்னும் நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது நமது சாதனை சற்று குறைவாகத்தான் அமைந்திருக்கிறது.

இன்னும் குறிப்பிட்டு சொன்னால் 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்கள் நமது மாநிலத்தில் 1.48 கோடி பேர் இருக்கிறார்கள். பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதி இருந்தும் அதனை போட்டுக்கொள்ளாதவர்கள் இன்னும் 11.6 லட்சம் பேர் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் இனி வரும் வாரங்களில் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதே நம் முன்பு இருக்கக்கூடிய சவாலாக அமைந்திருக்கிறது. அடுத்து பெருந்தொற்றை தடுப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகள் அனைத்தும் பெருமளவு குறைக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் பொது இடங்களிலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் அனைவரும் முக கவசம் அணிவதை நீங்கள் அனைவரும் உறுதி செய்திட வேண்டும்.

இவ்வாறு பொருளாதார வளர்ச்சி தடைபட்டு விடாமலும், மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் பாதிக்கப்பட்டு விடாமலும் இருப்பதை உறுதி செய்யக்கூடிய அதே நேரத்தில் எதிர்காலத்தில் இந்த பெருந்தொற்றினால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்திட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே நம் குறிக்கோளாக அமைந்திட வேண்டும்.

இதை மனதிலே நிறுத்தி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து அரசு துறைகளும், மாவட்ட ஆட்சியர்களும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற எனது வேண்டுகோளை இந்த தருணத்தில் மீண்டும் உங்கள் முன்பு வைக்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் கட்டாயம் அணிவது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இது தவிர மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »