Press "Enter" to skip to content

இலங்கை மக்களுக்கு உதவும் தீர்மானம் அரசியல் லாபமாக மாறிவிடக்கூடாது- மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கைக்கு நமது நாடு ஏற்கனவே உதவி வழங்கி வருவதில் உள்ள தகவல்கள் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது.

சென்னை:

இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி கேட்டு தமிழக அரசு சட்ட சபையில் நிறைவேற்றி இருக்கும் தீர்மானம் குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறோம். இந்த தருணத்தில் சொல்லுதல் யார்க்கும் எளிய… என்ற திருக்குறளை நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்க ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தியபோது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை அரசியல் லாபம் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருந்தது. அதேபோன்ற செயலாக தற்போதைய தீர்மானமும் மாறிவிடக்கூடாது.

2009ல், இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, ​​மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், மாநிலத்தில் தி.மு.க அரசும் ஆட்சியில் இருந்தும், தமிழ் மக்களை யுத்த வலயத்தில் இருந்து மீட்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஆனால் போர் நிறுத்தத்திற்காக திமுக கடுமையாக உழைத்தது என்ற மாயக்கதையை உருவாக்கியதை போல் இந்தத் தீர்மானம் 2 மணிநேர வேகமான சூழ்நிலையை உருவாக்கி மற்றொரு சாதனையாக இருக்கக் கூடாது என்பதே எங்கள் கவலை.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கைக்கு நமது நாடு ஏற்கனவே உதவி வழங்கி வருவதில் உள்ள தகவல்கள் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில், இந்தியா இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றம் உள்ளடக்கிய நிதி உதவியை வழங்கியது.

ஒட்டுமொத்த அடிப்படையில், 2022 ம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை மக்களுக்கு இந்திய ஆதரவு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கி உள்ளது. 4 லட்சம் டன் எரிபொருள் 10 லட்சம் டன் சரக்குகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கூடுதலாக 1 பில்லியன் கடன் வசதியின் கீழ் சுமார் 40,000 டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தை உயர்த்த உதவும்.

பிப்ரவரியில், பெட்ரோலியப் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு உதவியாக குறுகிய கால கடனாக இந்தியா 500 பில்லியன் டாலர்கள் வழங்கியது. நவம்பரில் 100 டன் நானோ நைட்ரஜன் திரவ உரங்களையும் வழங்கி இருப்பதை கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »