Press "Enter" to skip to content

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது மேற்கொண்டுள்ள ஊட்டி பயணத்தின் இடையே அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தற்போது 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.

மொத்த
எம்.எல்.ஏ.க்களின் 15 சதவீதம் பேருக்கு அமைச்சர் பதவி வாய்ப்பு
கொடுக்கலாம் என்ற அடிப்படையில் 34 பேர் அமைச்சர் பதவி வகித்து
வருகிறார்கள்.

தி.மு.க. அரசு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்று
சமீபத்தில் ஓராண்டு நிறைவு பெற்றது. இந்த நிலையில் தமிழக அமைச்சர்களின்
செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இதற்காக அவர் தனி கண்காணிப்பு பிரிவை
உருவாக்கி இருக்கிறார்.

அந்த பிரிவின் மூலம் தமிழகத்தில் உள்ள
ஒவ்வொரு அமைச்சரும் எப்படி செயல்படுகிறார்கள் என்பது ஆய்வு
செய்யப்படுகிறது. அமைச்சர்கள் தங்கள் துறை ரீதியான முடிவுகளை உடனுக்குடன்
எடுக்கிறார்களா? என்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில்
கண்காணித்து தெரிந்து கொள்கிறார்.

மேலும் அமைச்சர்கள் தங்கள் துறை
பணிகளை நிலுவையில் வைத்துள்ளார்களா? எதனால் அந்த பணிகள் நிலுவையில் உள்ளன?
என்பது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிந்து கொள்கிறார்.

சமீபத்தில்
ஓராண்டு பூர்த்தியானபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அமைச்சர்களை
அழைத்து நேரில் பாராட்டினார். ஒதுக்கப்பட்ட துறைகளில் மிக சிறப்பாக
பணியாற்றியதாக கூறி அந்த அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உற்சாக மூட்டினார். தொடர்ந்து பணிகளை திறம்பட செய்யுமாறு அறிவுறுத்தினார்.

அதே
சமயத்தில் சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினுக்கு சற்று லேசான அதிருப்தி ஏற்பட்டு இருப்பதாக
கூறப்படுகிறது. இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாமே என்று அந்த
அமைச்சர்கள் மீது அவர் கருத்து தெரிவித்ததாக கோட்டை வட்டாரத்தில்
பேசப்படுகிறது.

அந்த வகையில் 4 அமைச்சர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிருப்தி நிலவுவதாக பேசப்படுகிறது.

இந்த
நிலையில் தமிழக அமைச்சரவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றி அமைக்க
திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. தி.மு.க. ஆட்சி ஓராண்டு முடிந்த
நிலையில் மக்கள் மத்தியில் அனைத்து துறைகளிலும் வரவேற்பை பெற முடிவு செய்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்றவும்
ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

கடந்த சில தினங்களாகவே இதுபற்றி
பல்வேறு தரப்பிலும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தற்போது மேற்கொண்டுள்ள ஊட்டி பயணத்தின் இடையே அமைச்சரவை
மாற்றம் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி
உள்ளன.

இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டியில் இருந்து
சென்னை திரும்புகிறார். வருகிற நாட்களில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக அவர்
இறுதி முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் தமிழக
அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அமைச்சரவை
மாற்றத்தின் போது அதிருப்தி பட்டியலில் இருக்கும் 4 அமைச்சர்கள் மந்திரி
சபையில் இருந்து நீக்கப்படலாம் என்று உறுதி செய்பப்படாத தகவல்கள் உலா
வருகின்றன. அப்படி 4 அமைச்சர்கள் நீக்கப்பட்டால் அவர்களுக்கு பதில் 4
புதியவர்கள் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அந்த
சூழ்நிலையில் அந்த 4 பேரும் இளைஞர்களாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே
தி.மு.க. இளைஞரணி தலைவரும், திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி
எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று
கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழக மூத்த அமைச்சர்களில் பலரும் தி.மு.க.
மூத்த தலைவர்களில் பலரும் உதயநிதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தி.மு.க.
நிர்வாகிகள் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. உதயநிதி ஸ்டாலின்
அமைச்சராகும் பட்சத்தில் அவருக்கு எந்த இலாகா ஒதுக்கீடு செய்யப்படும் என்ற
எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்… கல்லெண்ணெய், டீசலுக்கான செஸ் வரியை குறைக்க வேண்டும்-ப.சிதம்பரம் கருத்து

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »