Press "Enter" to skip to content

உலக அளவில் ரூ.150 கோடி வசூலுடன் முன்னேறும் ‘வாரிசு’, ‘துணிவு’

விஜய்யின் ‘வாரிசு’ உலக அளவில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ‘துணிவு’ படமும் ரூ.150 கோடியை வசூலித்து முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அததுமீறல்களை பேசுகிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். ஜனவரி 11-ம் தேதி வெளியான இப்படத்தின் சிறப்புக் காட்சிகள் முதல்நாள் நள்ளிரவு 1 மணி அளவில் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டன. இந்நிலையில், படம் வெளியான முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ.24.59 கோடியை ‘துணிவு’ வசூலித்ததாக தகவல் வெளியாகியானது. தமிழ்நாட்டில் படம் அடுத்த சில நாட்களில் ரூ.100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உலக அளவில் படம் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் நாள் இப்படம் ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், படம் உலக அளவில் 5 நாட்களில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. உலக அளவில் ‘வாரிசு’, ‘துணிவு’ இரண்டு படங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு முன்னேறி வருகின்றன.

ஆனால், இரண்டு படங்களின் உலக அளவிலான பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை பொறுத்தவரையில் ‘வாரிசு’ வசூலில் முந்துவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் வாரிசைக் காட்டிலும் ‘துணிவு’ கூடுதலான வசூல் வேட்டை நிகழ்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »