Press "Enter" to skip to content

“சட்டக்கல்லூரி மாணவரின் செயல் வருத்தமளிக்கிறது” – அபர்ணா பாலமுரளி

“ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவளைத் தொடுவது சரியல்ல என்ற புரிதல் கூட சட்டக்கல்லூரி மாணவருக்கு இல்லாதது வேதனையைத் தருகிறது” என்று நடிகை அபர்ணா பாலமுரளி தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அபர்ணா பாலமுரளி தமிழில் வெளியான ‘சூரரைப்போற்று’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்றவர். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கம்’ மலையாள படத்தின் ப்ரமோஷன் நிகழ்வு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற்றது. அங்கு இயங்கிவரும் சட்டக் கல்லூரி ஒன்றில் நடந்த இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் வினீத் சீனிவாசன், நாயகி அபர்ணா பாலமுரளி, படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழா தொடங்கிய சிறிது நேரத்தில் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அபர்ணா பாலமுரளிக்கு சிறிய பூங்கொத்து கொடுத்துவிட்டு, அவர் மீது அத்துமீறி கையைப் போட்டு சேர்ந்து புகைப்படம் எடுக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத அபர்ணா, அதிர்ச்சியில் அந்த மாணவரிடமிருந்து விலகிச் சென்றார். இது தொடர்பான காணொளி வெளியாகிய நிலையில், இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து அபர்ணா பாலமுரளி தெரிவித்துள்ளதாக கேரள செய்தி இணையதளம் குறிப்பிட்டுள்ளதாவது, “ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவளைத் தொடுவது சரியல்ல என்ற புரிதல் கூட சட்டக்கல்லூரி மாணவருக்கு இல்லாதது வேதனையைத் தருகிறது. எனது கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக எழுப்பியதும் சரியான முறையல்ல. அதன்பிறகு அந்த மாணவர், எனது தோளில் கைகளை வைக்க முயன்றார். இவ்வாறு ஒரு பெண்ணிடம் நடந்துகொள்ளும் முறை சரியானதல்ல.

இந்த விவகாரத்தின் பின்னால் செல்ல எனக்கு நேரமில்லை என்பதால் நான் புகார் அளிக்கவில்லை. எனது அதிருப்தியையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தியதன் மூலம் இதுபோன்ற நடத்தைக்கு நான் பதிலளித்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்கள், நிகழ்ச்சி முடிந்தப்பின்பு மன்னிப்புக் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நடிகை மஞ்சிமாக மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த காணொளியைப் பகிர்ந்து நம்பமுடியாததாகவும், அருவருக்கத்தக்க செயலாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பாடகி சின்மயியும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »