Press "Enter" to skip to content

”பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்றை திரித்துவிட்டார்” – இயக்குநர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு

சென்னை: வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறி இயக்குநர் மணிரத்னத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், “அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றைத் திரித்து இயக்கியுள்ளார். முக்கிய கதாபத்திரமான வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியதுடன், தனது சுய லாபத்திற்காக வரலாற்றை தவறாகப் பயன்படுத்தி உள்ளார். வரலாற்றின் அடிப்படையில் படம் எடுக்கும் முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும்.

வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கியும் பயன்படுத்தி உள்ள நிலையில், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குநர் மணிரத்னம் வரலாற்றை இந்த திரைப்படத்தில் திரித்துள்ளார். இதுதொடர்பாக அவருக்கு எதிராக, மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »