சர்வதேச திரையுலகில் மிகப்பெரிய விருதாகக் கருதப்படுவது, ஆஸ்கர். 95 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மார்ச் 12ம் தேதி நடக்கிறது. இதில், 23 பிரிவுகளில் போட்டியிடும் படங்களின் இறுதிப்பட்டியல் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆவணத் திரைப்படப்பிரிவில் ‘ஆல் தட் பிரீத்ஸ்’ ஆவணக் குறும்படப்பிரிவில், ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆகியவை இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்ட ‘செல்லோ ஷோ’ படம் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை. இந்நிலையில் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில், ஆங்கிலேய பெண்ணாகவும் ‘நாட்டு நாட்டு’ பாடல் காட்சியில் பங்கேற்றவருமான நடிகை ஒலிவியா மோரிஸ், இந்தப் பாடல் தனக்குப் பிடித்த ஒன்று தெரிவித்துள்ளார்.
“அந்தப் பாடல், ராஜமவுலி மற்றும் இசை அமைப்பாளர் கீரவாணியால் மட்டுமே சாத்தியமான ஒன்று. கோல்டன் குளோப் விருதை வென்றதும் ஆஸ்கர் விருதின் இறுதிப்பட்டியலில் இப்பாடல் இடம் பிடித்திருப்பதும் அற்புதமான விஷயம். இந்தச் சிறந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்ததில் நன்றியுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ கடந்த மார்ச் 25-ம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்துக்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Source: Hindu