Press "Enter" to skip to content

இசைப் படைப்புகளுக்கு ஜிஎஸ்டி: வரி விதிப்புக்கு எதிரான ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் மனுக்கள் தள்ளுபடி

சென்னை: இசைப் படைப்புகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை எதிர்த்து, பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையர் கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கடந்த 2020-ம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், “இசைப் படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள்தான். தன்னிடம் வரி வசூலிப்பது சட்ட விரோதம். என் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் ஜிஎஸ்டி ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது. அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை. மேலும், ஜிஎஸ்டி துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வு பெறாமல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டடுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல், ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்தாத கூறி ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஜிஎஸ்டி ஆணையரின் உத்தரவை எதிர்த்து ஜிஎஸ்டி மேல் முறையீட்டு அதிகாரியிடம் நான்கு வாரங்களில் மேல் முறையீடு செய்யலாம் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, நான்கு வாரங்களில் நோட்டீசுக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »